Saturday, August 21, 2010

எபேசியர் 5-6


1 ஆகவே, அன்புப் பிள்ளையாய், நீங்கள் கடவுளைப்போல் ஒழுக முயலுங்கள்.
2 கிறிஸ்து தம்மையே கடவுளுக்கு நறுமணம் வீசும் காணிக்கையும் பலியுமாக நம்மை முன்னிட்டுக் கையளித்து உங்கள் மேல் அன்பு கூர்ந்தது போல், நீங்களும் அன்பு கொண்டு ஒழுகுங்கள்.
3 கெட்ட நடத்தை. அசுத்தம், பொருளாசை முதலியவற்றின் பெயர் முதலாய் உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.
4 நாணங்கெட்ட பேச்சு, மூடச்சொல் பகடித்தனம் முதலியன வேண்டாம். இவையெல்லாம் சரியல்ல; 'நன்றி கூருதலே தகும்.
5 ஏனெனில், கெட்ட நடத்தையுள்ளவன், காமுகன், சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை கொண்டவன் எவனும் கிறிஸ்துவுக்கும் கடவுளுக்கும் உரிய அரசில் உரிமை பேறு அடையான். இது உங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருக்கட்டும்.
6 வீண் வார்த்தைகளால் யாரும் உங்களை ஏமாற்ற விடாதீர்கள். எனெனில், இவையே இறைவனுக்குக் கீழ்ப்படியாத மக்கள் மீது அவருடைய சினத்தை வரவழைக்கின்றன.
7 ஆகவே நீங்கள் அவர்களோடு ஒன்றும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
8 ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்பொழுது ஆண்டவருக்குள் ஒளியாய் இருக்கிறீர்கள் ஒளியின் மக்களாக நடந்துகொள்ளுங்கள்.
9 ஒளியின் கனிகளோ நன்மை, நீதி, உண்மை.
10 ஆண்டவருக்கு உகந்தது எது என்று உய்த்துணருங்கள்.
11 இருளின் பயனற்ற செயல்களைச் செய்பவர்களோடு சேர வேண்டாம்; அவை தவறெனக் காட்டுங்கள்.
12 மறைவில் அவர்கள் செய்வதெல்லாம் சொல்லக்கூட வெட்கமாயிருக்கிறது.
13 ஒளியானது அவை அனைத்தும் தவறெனக் காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது.
14 அவ்வாறு வெளியாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது. எனவேதான், 'தூங்குபவனே எழுந்திரு. இறந்தோரினின்று எழுந்து நில். கிறிஸ்து உன்மேல் ஒளிர்ந்தெழுவார்.' என்றுள்ளது,
15 ஆகையால், உங்கள் நடத்தையைப் பற்றிக் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் நடக்காமல் ஞானிகளாக நடந்து கொள்ளுங்கள்.
16 நாம் வாழும் இக்காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; இது பொல்லாத காலம்.
17 எனவே, அறிவிலிகளாய் இராமல் ஆண்டவருடைய திருவுளம் யாது என அறிந்துணருங்கள்.
18 குடிமயக்கத்திற்கு இடங்கொடாதீர்கள். அதனால் ஒழுக்கக் கேடுதான் விளையும்.
19 தேவ ஆவியிலே நிறைவு பெறுங்கள். தேவ ஆவி ஏவிய சங்கீதங்கள், புகழ்ப்பாக்கள், பாடல்கள் இவற்றைக் கொண்டு உரையாடி, ஆண்டவருக்கு உளமார இசை பாடிப் புகழுங்கள்.
20 இங்ஙனம், கடவுளும் தந்தையுமானவருக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால், அனைத்திற்காகவும் எந்நேரமும் நன்றி கூறுங்கள்.
21 கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
22 மனைவியரே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல் உங்கள் கணவர்க்குப் பணிந்திருங்கள்.
23 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல் கணவன் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். 'கிறிஸ்து திருச்சபையாகிய தம் உடலின் மீட்பர்.
24 அந்தத் திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல் மனைவியரும் கணவர்க்கு அனைத்திலும் பணிந்திருந்தல் வேண்டும்.
25 கணவர்களே 'கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்தது போல் நீங்களும் உங்கள் மனைவியருக்கு அன்பு செய்யுங்கள்.
26 ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காகத் தம்மையே கையளித்தார்.
27 அத்திருச்சபை கறைதிரையோ வேறு எக்குறையோ இன்றி, பரிசுத்தமும் மாசற்றதுமாய்த் தம் திருமுன் மகிமையோடு துலங்கச் செய்ய வேண்டுமென்று அவர் திருவார்த்தையாலும் முழுக்கினாலும் அதைத் தூயதாக்கிப் பரிசுத்த மாக்குவதற்குத் தம்மைக் கையளித்தார்.
28 அவ்வாறே கணவர்களும் தம் மனைவியரைத் தம் சொந்த உடலெனக் கருதி அவர்களுக்கு அன்பு செய்யவேண்டும். மனைவிக்கு அன்பு காட்டுபவன் தனக்கே அன்பு காட்டுகிறான்.
29 தன்னுடைய உடலை எவனும் என்றும் வெறுப்பதில்லை; எவனும் அதைப் பேணி வளர்க்கிறான், கிறிஸ்துவும் அவ்வாறே திருச்சபையைப் பேணி வளர்க்கிறார்.
30 எனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள்.
31 "அதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான், இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள்."
32 இதில் அடங்கியுள்ள மறையுண்மை பெரிது. இது கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் பொருந்தும் என்று நான் சொல்லுகிறேன்.
33 சுருங்கக் கூறின், உங்களுள் ஒவ்வொருவனும் தன் மீது அன்பு காட்டுவதுபோல், தன் மனைவியின்மீது அன்பு காட்டுவானாக. மனைவியும் தன் கணவனுக்கு அஞ்சி நடப்பாளாக.
அதிகாரம் 6
1 பிள்ளைகளே, ஆண்டவருக்குள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; இதுவே முறை.
2 "தாய் தந்தையைப் போற்று" என்பதே வாக்குறுதியோடு கூடிய கட்டளைகளுள் முதலாவது.
3 "அப்போது மண்ணுலகில் நீ நலம்பெறுவாய், நீடூழி வாழ்வாய்" என்பது அவ்வாக்குறுதி.
4 தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்குச் சினமூட்டாதீர்கள் அவர்களைக் கண்டித்துத் திருத்தி, ஆண்டவருக்கேற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்தல் வேண்டும்.
5 அடிமைகளே கிறிஸ்துவுக்கே கீழ்ப்படிவது போல், இவ்வுலகத்தில் உங்கள் தலைவராய் இருப்போருக்கு, அச்ச நடுக்கத்தோடும் நேர்மையான உள்ளத்தோடும் கீழ்ப்படிந்திருங்கள்.
6 மனிதர்களுக்கு உகந்தவராகலாம் என்று, கண்முன் மட்டும் உழைப்பவர்களாய் இராமல், கிறிஸ்துவின் ஊழியர்களென, கடவுளுடைய திருவுளத்தை நெஞ்சாரா நிறைவேற்றுங்கள்.
7 மனிதருக்குச் செய்வது போலன்றி, கடவுளுக்கே செய்வதுபோல், உற்சாகத்தோடு ஊழியம் செய்யுங்கள்.
8 அடிமையாயினும் உரிமையுள்ளவனாயினும் நன்மை செய்யும் ஒவ்வொருவனும் ஆண்டவரிடமிருந்து கைம்மாறு பெறுவான்; இது உங்களுக்குத் தெரியுமன்றோ?
9 தலைவர்களே, நீங்களும் அடிமைகள் மட்டில் அவ்வாறே நடந்துகொள்ளுங்கள், அவர்களை மிரட்டுவதை விட்டு விடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தலைவர் வாகனத்தில் இருக்கிறார் என்பதும், அவர் முகத்தாட்சண்யம் பார்ப்பதில்லை என்பதும் நீங்கள் அறியாததன்று.
10 இறுதியாக, ஆண்டவரில் அவர் தரும் வலிமைமிக்க ஆற்றலால் உறுதி பெறுங்கள்.
11 அலகையின் வஞ்சகத் தந்திரங்களை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை அணிந்து கொள்ளுங்கள்.
12 ஏனென்றால், நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்கவோர், இருளில் மூழ்கிய இவ்வுலகின்மீது ஆதிக்கம் செலுத்துவோர். வான்வெளியில் திரியும் தீய ஆவிகள் ஆகிய இவர்களோடு போராடுகிறோம்.
13 எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றியடைந்து நிலை நிற்க வலிமை பெறும்படி, கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
14 ஆகையால் உண்மையை உங்கள் இடைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு நீதியை உங்கள் மார்புக் கவசமாக அணிந்து நில்லுங்கள்.
15 சமாதான நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை உங்கள் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள்.
16 எந்நிலையிலும் விசுவாசமாகிய கேடயத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இதைக்கெண்டு நீங்கள் தீயவனின் தீக்கணைகளை அவிக்க முடியும்.
17 மீட்பையே தலைச்சீராவாகத் தாங்கி,கடவுளின் சொல்லைத் தேவ ஆவி தரும் போர்வாளாக ஏந்திக்கொள்ளுங்கள்.
18 செபிப்பதிலும் மன்றாடுவதிலும் நிலையாய் இருங்கள். தேவ ஆவியால் ஏவப்பட்ட எவ்வேளையிலும் செபியுங்கள். இதன்பொருட்டு, சோர்வுறாமல் விழிப்பாய் இருங்கள்.
19 இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள் நான் பேசும்போது நற்செய்தியின் மறை பொருளைத் துணிவுடன் வெளிப்படுத்தவதற்கு இறைவன் வார்த்தையை எனக்கு அளிக்கும் படி எனக்காகவும் மன்றாடுங்கள்.
20 இந்த நற்செய்திக்காகவே நான் சிறைப்பட்ட தூதுவனாக இருக்கிறேன். பேச வேண்டிய முறையில், நான் அதைத் துணிவோடு எடுத்துரைக்க எனக்காக வேண்டுங்கள்.
21 என் நிலைமை எப்படி இருக்கிறது என்னும் செய்திகளையெல்லாம் நீங்கள் அறிய விரும்புவீர்கள். எல்லாவற்றையும் அன்புள்ள சகோதரர் தீக்கிக்கு உங்களுக்கு அறிவிப்பார். அவர் ஆண்டவருக்குள் நம்பிக்கைக்குரிய பணியாளர்.
22 எங்களைப்பற்றி உங்களுக்கு அறிவித்து உங்களைத் தேற்றுவதற்கென்றே அவரை உங்களிடம் அனுப்பினேன்
23 பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் சமாதானமும் சகோதரர்களுக்கு உண்டாகுக!
24 அழியா வாழ்வில் பங்கு பெற்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அன்பு செலுத்தும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக!






                                                                                           praise the lord
                                                            

1 comment: