Sunday, September 5, 2010

மத்தேயு

அதிகாரம் 22
1 இயேசு மீண்டும் அவர்களிடம் உவமைகளில் உரைத்ததாவது:
2 "விண்ணரசு, தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனுக்கு ஒப்பாகும்.
3 அவன் ஊழியரை அனுப்பித் திருமணத்திற்கு அழைக்கப்பெற்றவர்களை வரச்சொன்னான். அவர்களோ வர விரும்பவில்லை.
4 மீண்டும் வேறு ஊழியரை அனுப்பி, ' இதோ! விருந்து ஏற்பாடு செய்துள்ளேன்; காளைகளும் கொழுத்த மிருகங்களும் அடித்து எல்லாம் ஏற்பாடாயிற்று. திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பெற்றவருக்குச் சொல்லுங்கள் ' என்றான்.
5 அழைக்கப்பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை; ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்.
6 மற்றவர்களோ அவன் ஊழியரைப் பிடித்து அவமானப்படுத்திக் கொன்றனர்.
7 அதைக் கேட்ட அரசன் சினந்து, தன் படையை அனுப்பிக் கொலைகாரர்களைத் தொலைத்து அவர்கள் நகரையும் தீக்கிரையாக்கினான்.
8 பின்னர், தன் ஊழியரிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகிவிட்டது. அழைக்கப்பெற்றவர்களோ தகுதியற்றவர்களாயினர்.
9 எனவே, வீதிகளுக்குச் சென்று நீங்கள் காணும் எல்லாரையும் மணவிருந்துக்கு அழையுங்கள் ' என்றான்.
10 அவன் ஊழியரும் வீதிகளுக்குச் சென்று தாங்கள் கண்ட நல்லவர் கெட்டவர் அனைவரையும் கூட்டிச் சேர்த்தனர். மன்றம் நிரம்ப அவர்கள் பந்தி அமர்ந்தனர்.
11 அமர்ந்தோரைப் பார்க்க அரசன் உள்ளே வந்தான். அங்கே திருமண உடையணியாத ஒருவனைக் கண்டான்.
12 அவனை நோக்கி, 'நண்பா, திருமண உடையின்றி எப்படி உள்ளே நுழைந்தாய்?' என்று கேட்க, அவன் பேசாதிருந்தான்.
13 பின்னர் அரசன் பணியாளரை நோக்கி, ' கையும் காலும் கட்டி இவனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் ' என்று சொன்னான்.
14 ஏனெனில், அழைக்கப்பெற்றவர்களோ பலர்; தேர்ந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்."
15 பின்னர், பரிசேயர் போய் அவரைப் பேச்சில் அகப்படுத்த ஆலோசனை செய்தனர்.
16 தங்கள் சீடரை ஏரோதியரோடு அவரிடம் அனுப்பி, "போதகரே, நீர் உண்மை உள்ளவர்; கடவுள்வழியை உண்மைக்கேற்பப் போதிக்கிறீர். நீர் யாரையும் பொருட்படுத்துவதில்லை, முகத்தாட்சணியம் பார்ப்பதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.
17 எனவே, எங்களுக்குச் சொல்லும்: செசாருக்கு வரி கொடுப்பது முறையா ? இல்லையா ? இதைப்பற்றி உம் கருத்து என்ன ?" என்றனர்.
18 இயேசு அவர்களது கெடுமதியை அறிந்து, "வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் ?
19 வரி நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்" என்றார். ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தனர்.
20 இயேசு, "இவ்வுருவமும் எழுத்தும் யாருடையவை ?" என்றார்.
21 "செசாருடையவை" என்றனர். அப்பொழுது அவர்களை நோக்கி, "ஆதலால் செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்றார்.
22 இதைக் கேட்டு அவர்கள் வியப்புற்று அவரை விட்டுப்போயினர்.
23 உயிர்த்தெழுதல் இல்லையென்று கூறும் சதுசேயர் அவரை அன்று அணுகி,
24 "போதகரே, ' ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவன் சகோதரன் அவனுடைய மனைவியை மணந்து, தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் ' என்று மோயீசன் சொல்லியிருக்கிறார்.
25 எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் மணம்முடித்து மகப்பேறின்றித் தன் மனைவியைச் சகோதரனுக்கு விட்டு இறந்தான்.
26 அப்படியே இராண்டாம், மூன்றாம், ஏழாம் சகோதரன்வரைக்கும் நடந்தது.
27 எல்லாருக்கும் கடையில் அப்பெண்ணும் இறந்தாள்.
28 ஆகவே, உயிர்த்தெழும்போது அவள் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாக இருப்பாள் ? எல்லாரும் அவளை மணம்செய்திருந்தனரே" என்று கேட்டனர்.
29 அதற்கு இயேசு, "மறைநூலையும் கடவுளுடைய வல்லமையையும் நீங்கள் அறியாததால் தவறாக நினைக்கிறீர்கள்.
30 ஏனெனில், உயிர்த்தெழும்போது பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. வானகத்தில் கடவுளின் தூதரைப்போல் இருப்பார்கள்.
31 இறந்தோர் உயிர்த்தெழுவதுபற்றிக் கடவுள், ' நாம் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று உங்களுக்குக் கூறினதை நீங்கள் படித்ததில்லையா ?
32 அவர், வாழ்வோரின் கடவுளேயன்றி இறந்தோரின் கடவுள் அல்லர்" என்றார்.
33 இதைக் கேட்ட மக்கட்கூட்டம் அவர் போதனையைப்பற்றி மலைத்துப்போயிற்று.
34 அவர் சதுசேயரை வாயடக்கியது கேள்வியுற்ற பரிசேயர் ஒன்றுகூடினர்.
35 அவர்களுள் சட்டவல்லுநனாகிய ஒருவன்,
36 "போதகரே, திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டான்.
37 இயேசு அவனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக.
38 இதுவே எல்லாவற்றிலும் பெரிய முதன்மையான கட்டளை.
39 இரண்டாவது இதை யொத்ததே; உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக.
40 திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை" என்றார்.
41 பரிசேயர் திரண்டு கூடியிருக்கையில் இயேசு,
42 "மெசியாவைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? அவர் யாருடைய மகன் ?" என்று வினவினார். "தாவீதின் மகன்" என்றார்கள்.
43 அதற்கு அவர், "அப்படியானால் தாவீது, தேவ ஆவியால் ஏவப்பட்டு,
44 அவரை ஆண்டவர் என்று அழைப்பது எப்படி ? ஏனெனில், ' ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும் ' எனச் சொல்லியிருக்கிறாரே.
45 ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாக மட்டும் இருப்பது எப்படி ?" என்றார்.
46 அதற்கு ஒருவனும் ஒரு வார்த்தைகூட மறுமொழி சொல்ல முடியவில்லை. அன்றுமுதல் அவரிடம் மேலும் கேள்வி கேட்க ஒருவனும் துணியவில்லை.
அதிகாரம் 23
1 பின்னர், இயேசு தம் சீடரையும் மக்கட்கூட்டத்தையும் நோக்கிக் கூறியதாவது:
2 "மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோயீசனுடைய இருக்கையில் அமர்ந்துள்ளனர்.
3 அவர்கள் உங்களுக்குச் சொல்லுவதெல்லாம் கடைப்பிடித்து நடங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோலச் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள்; செய்வதில்லை.
4 பளுவான சுமையைக் கட்டி மக்களுடைய தோள்மேல் வைக்கிறார்கள்; தாங்களோ அதை ஒரு விரலாலும் அசைக்கமாட்டார்கள்.
5 தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்கவேண்டுமென்றே செய்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தம் சீட்டுப்பட்டங்களை அகலமாக்கிக் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.
6 விருந்துகளில் முதலிடங்களையும், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும் விரும்புகின்றனர்.
7 பொது இடங்களில் வணக்கம் பெறவும், மக்களால் 'ராபி' எனப்படவும் ஆசிக்கின்றனர்.
8 நீங்களோ 'ராபி' என்று அழைக்கப்படவேண்டாம். ஏனெனில், உங்கள் போதகர் ஒருவரே; நீங்கள் அனைவரும் சகோதரர்.
9 மண்ணுலகில் ஒருவரையும் தந்தையென்று கூறவேண்டாம். ஏனெனில், விண்ணுலகிலுள்ளவர் ஒருவரே உங்கள் தந்தை.
10 குரு என்றும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில், மெசியா ஒருவரே உங்கள் குரு.
11 உங்களுக்குள் பெரியவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.
12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்.
13 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு!
14 ஏனெனில், மனிதர் விண்ணரசில் நுழைகையில் வாயிலை அடைத்துவிடுகிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை.
15 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஒருவனை மதத்தில் சேர்க்க நாடும் கடலும் சுற்றி அலைகிறீர்கள். அவன் சேர்ந்தபின் உங்களைவிட இரு மடங்கு அவனை நரகத்துக்கு உரியவனாக்குகிறீர்கள்.
16 குருட்டு வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆலயத்தின்மீது ஒருவன் ஆணையிட்டால் அது ஒன்றுமில்லை; ஆனால், ஆலயத்தின் பொன்மீது ஆணையிட்டால் அவன் கடமைப்பட்டவன் என்கிறீர்களே.
17 மூடரே, குருடரே, எது பெரிது? பொன்னா? பொன்னைப் பரிசுத்தமாக்கும் ஆலயமா?
18 மேலும் ஒருவன் பீடத்தின்மீது ஆணையிட்டால் அது ஒன்றுமில்லை; ஆனால், பீடத்தின் மேலுள்ள காணிக்கையின் மீது ஆணையிட்டால் அவன் கடமைப்பட்டவன் என்கிறீர்கள்.
19 குருடரே, எது பெரிது? காணிக்கையா? காணிக்கையைப் பரிசுத்தமாக்கும் பீடமா?
20 எனவே, பீடத்தின் மீது ஆணையிடுவோன் அதன் பெயராலும், அதன் மேலுள்ள அனைத்தின் பெயராலும் ஆணையிடுகிறான்.
21 ஆலயத்தின் பெயரால் ஆணையிடுகிறவன் அதன் பெயராலும், அதில் குடிகொண்டிருப்பவர் பெயராலும் ஆணையிடுகிறான்.
22 வானகத்தின் பெயரால் ஆணையிடுகிறவன் கடவுளுடைய அரியணையின் பெயராலும், அதன்மேல் வீற்றிருப்பவர் பெயராலும் ஆணையிடுகிறான்.
23 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதகுப்பி, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பகுதி செலுத்துகிறீர்கள். ஆனால், திருச்சட்டத்தில் முக்கிய படிப்பினைகளான நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள். இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; அவற்றையும் விடலாகாது.
24 குருட்டு வழிகாட்டிகளே, கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறீர்கள்.
25 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். ஆனால், உள்ளே கொள்ளையும் துர் இச்சையும் நிறைந்துள்ளன.
26 குருட்டுப் பரிசேயனே, கிண்ணத்தின் உட்புறத்தை முதலில் தூயதாக்கு; அப்பொழுது வெளிப்புறமும் தூயதாகும்.
27 வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை வெளியே மனிதருக்கு வனப்பாகத் தோன்றுகின்றன. உள்ளேயோ இறந்தோர் எலும்புகளும், எவ்வகை அசுத்தமும் நிறைந்துள்ளன.
28 அவ்வாறே நீங்களும் வெளியே மனிதருக்கு நீதிமான்களாகத் தோன்றுகிறீர்கள். உள்ளேயோ கள்ளத்தனத்தாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
29 "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டி நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கிறீர்கள்.
30 எங்கள் முன்னோர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால், அவர்கள் இறைவாக்கினர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு உடந்தையாய் இருந்திருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
31 இவ்வாறு, இறைவாக்கினர்களைக் கொன்றவர்களுடைய மக்கள் நீங்கள் என்பதற்கு, நீங்களே உங்களுக்கு எதிர்சாட்சிகள்.
32 எனவே, உங்கள் முன்னோர் தொடங்கியதை நீங்கள் முடித்துவிடுங்கள்.
33 பாம்புகளே, விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் நரகத் தீர்வைக்கு எப்படித் தப்பமுடியும்?
34 எனவே, இதோ! நான் இறைவாக்கினர்களையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரைக் கொல்வீர்கள், சிலுவையில் அறைவீர்கள்; சிலரை உங்கள் செபக்கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்; ஊர் ஊராய் விரட்டியடிப்பீர்கள்.
35 இவ்வாறு குற்றமற்ற ஆபேலுடைய இரத்தம்முதல், ஆலயத்திற்கும் பீடத்திற்கும் இடையே நீங்கள் கொன்றவரும், பரக்கியாவின் மகனுமான சக்கரியாசின் இரத்தம்வரை சிந்திய மாசற்ற இரத்தத்தின் பழி எல்லாம் உங்கள்மேல் வந்துவிழும்.
36 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இவையனைத்தும் இத்தலைமுறைமேல் வந்துவிழும்.
37 "யெருசலேமே, இறைவாக்கினர்களைக் கொன்று உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியும் யெருசலேமே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்றுசேர்ப்பதுபோல நானும் உன் மக்களை ஒன்றுசேர்க்க எத்தனையோ முறை விரும்பினேன். நீயோ உடன்படவில்லை.
38 இதோ! உங்கள் வீடு குடியற்றுப்போகும்.
39 ஏனெனில், ' ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி ' என்று நீங்கள் கூறும்வரை இனி என்னைக் காணமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

1 comment: