Tuesday, July 20, 2010

எபிரேயர்

சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.
2 விருந்தோம்பலை மறவாதீர்கள். 'விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களையும் உபசரித்ததுண்டு.
3 சிறைப்பட்டுள்ளவர்களோடு நீங்களும் சிறைப்பட்டிருப்பது போல, அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள்.
4 திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக. பள்ளியறை மஞ்சம் மாசுறாது இருக்கட்டும். காமுகரும் விபசாரரும் கடவுள் தீர்ப்புக்கு உள்ளாவர்.
5 பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளது போதுமென்றிருங்கள். ஏனெனில், 'நான் ஒருபோதும் உன்னைக் கைவிடேன்; உன்னை விட்டுப் பிரியேன்' என்று இறைவனே கூறுகிறார்.
6 இதனால் நாம் துணிவோடு 'கடவுளே எனக்குத் துணை, அஞ்சேன், மனிதர் எனக்கு என்ன செய்யமுடியும்?" என்று சொல்ல முடியும்.
7 உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவு கூருங்கள். அவர்களது வாழ்வின் நற்பயனை எண்ணிப் பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.
9 பல்வேறு நூதனமான போதனைகளால் கவரப்படாதிருங்கள். உள்ளங்களை அருளால் உறுதிப்படுத்தலே சிறந்தது. உணவு பற்றிய முறைமைகள் இதற்கு உதவா. இவற்றைக் கடைப்பிடித்தவர்கள் பயனொன்றும் அடையவில்லை.
10 நமக்கொரு பீடமுண்டு: அதில் படைக்கப்பட்டதை உண்பதற்கு கூடாரத்தில் வழிபடுவோர்க்கு உரிமையில்லை.
11 எந்த மிருகங்களில் இரத்தம் பாவப் பரிகாரமாகத் தூயகத்திற்குள் தலைமைக் குருவினால் எடுத்துச் சொல்லப்படுகிறதோ, அவற்றின் உடல் பாசறைக்குப் புறம்பே எரிக்கப்படுகின்றது.
12 அதனால்தான் இயேசுவும் தம் சொந்த இரத்தத்தால் மக்களைப் பரிசுத்தப்படுத்த வேண்டி, நகர் வாயிலுக்கு வெளியே பாடுபட்டார்.
13 ஆகவே நாமும் அவர் பட்ட நிந்தையை ஏற்று அவரிடம் போய்ச்சேர, பாசறையை விட்டு வெளியேறுவோமாக.
14 ஏனெனில், நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை; வரப்போகும் நகரையே நாடிச் செல்கிறோம்.
15 ஆகவே நாம் அவர் வழியாக எப்போதும் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியை ஒப்புக் கொடுப்போமாக. அவருடைய பெயரை அறிக்கை செய்வதால் நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலி.
16 பிறருக்கு உதவிபுரியவும், உங்களுக்குள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளையே கடவுள் உவந்து ஏற்கிறார்.
17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்: அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைக் குறித்துக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதால், உங்கள் ஆன்ம நலனில் விழிப்பாய் இருக்கின்றனர். இப்பொறுப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியானதாய் இருக்கும்படி நடந்துகொள்ளுங்கள். மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது. எங்களுக்காக மன்றாடுங்கள்.
18 எங்கள் மனச்சாட்சி குற்றமற்றதென்றே நம்புகிறேன். எல்லாவற்றிலும் நேர்மையோடு நடக்க வேண்டுமென்பதே எம் விருப்பம்.
19 உங்களிடம் கூடிய விரைவில் நான் வந்து சேரும்படி நீங்கள் மன்றாட இன்னும் மிகுதியாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
20 ஆடுகளின் மகத்துவமிக்க மேய்ப்பரான நம் ஆண்டவராகிய இயேசுவை, முடிவில்லா உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, இறந்தோரிடமிருந்து எழுப்பியவரும் சமாதானத்தின் ஊற்றுமாகிய கடவுள்,
21 தமது திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்ய உங்களுக்குத் தகுதி அளித்து, தமக்கு உகந்ததை இயேசு கிறிஸ்துவின் வழியாக நம்மில் செய்தருள்வாராக. இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
22 சகோதரரே, நான் உங்களுக்குக் கூறும் இவ்வறிவுரையை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன். சுருக்கமாகவே உங்களுக்கு எழுதியுள்ளேன்.
23 இன்னும் ஒரு செய்தி. நம் சகோதரர் தீமோத்தேயு விடுதலையாகி விட்டார். அவர் விரைவில் வந்து சேர்ந்தால் அவரோடு நான் உங்களைப் பார்க்க வருவேன்.
24 உங்கள் தலைவர்களுக்கும், இறைமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். இத்தாலிய நாட்டுச் சகோதரர் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

1 comment: